நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது.

  1. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.
  2. இரண்டு எம்மை நேசிக்கும் நபர்களின் நேசத்தை புரிந்துகொள்ளாதவர்களாக அவர்களை தள்ளி வைப்போம். பொதுவாக இவ்விரண்டிலும் தான் முழு மனித வர்க்கமே தடுமாறுகின்றது.

உன்னை நேசிக்காத நபர்களை நீ நேசிக்கின்றாயா? அல்லது உன்னை நேசிக்கும் நபர்களின் உண்மையான அன்பை புரிந்துகொள்ளாத நபராக இருக்கின்றாயா? என்பதை நிச்சயமாக நீ சிந்திக்க வேண்டும்.

ஆமாம். விளங்க வைக்கிறேன். நான் திருமண வயதை அடைந்தபோது நான் சிந்தித்த இரு பெண்கள் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் ஊழியம் செய்து வந்தனர். அதில் ஒரு பெண் என்னை விரும்பினாள். ஆனால் அவளது அன்பை நான் புரிந்துகொள்ள இயலவில்லை. காரணம் – நான் அதே இடத்திலிருந்த இன்னொரு பெண்ணை நேசித்ததே. சில காலம் சென்ற போதுதான் இரண்டாமவள் – நான் நேசித்தவள் – எனது நேசத்திற்கு உகந்தவள் அல்ல என்பதை உணர்ந்தேன். அதற்கிடையில் என்னை நேசித்தவள் என்னை விட்டு விலகி சென்றுவிட்டாள்.


தற்பொழுது எனக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மகனை நான் அதிகமாக நேசிப்பதினால் – அவனுக்கு செலவு செய்யும்போது எவ்வித கணக்கும் பார்ப்பதில்லை. ஆனால் மகளுக்கு செலவு செய்யும்போது கணக்கு பார்கிறேனே… ஏன்? உண்மையில் மகனை விட மகளே அதிகமாக என்மீது அன்பு காட்டுகின்றாள் என்பதை நான் நன்கு அறிந்திருந்தும் ஒரவஞ்சனை எனக்குள் தலைதுாக்குவதை உணர்ந்திருக்கிறேன்.

நான் பணிபுரியும் கிறிஸ்தவ அலுவலகத்தில் எனது உயர் அதிகாரி தான் விரும்பும் நபர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதை அதிகமாக நேரங்களில் கண்டிருக்கிறேன். தான் விரும்பாத நபர்களுக்கு எவ்வித உயர்வையோ உரிய கனத்தையோ கொடுப்பதில்லை. காலப்போக்கில் அவர் யாரை நேசித்து பதவி உயர்வு கொடுத்தாரோ அவர்களே இவரோடு வேலை செய்ய முடியாது அல்லது சம்பளம் போதாது என விலகி சென்றதை கண்டிருக்கிறேன். அதேநேரம் அவர் யாரை நேசிக்காமல் ஒதுக்கினாரோ அவர்களே அவருக்கு அதிக நன்மை செய்துள்ளார்கள்.

இப்ப சொல்லுங்கள்… நாம் யாரை நேசிக்கிறோம், உங்களை நேசிப்பவர்களை அவர்களின் நேசத்தை அசட்டை செய்கின்றீர்களா அல்லது உங்களை உண்மையாக நேசிக்காதவர்களின் மாயைக்குள் அகப்பட்டுள்ளீர்களா

நீதிமொழிகள் 7 ம் அதிகாரத்தின் 22ம் 23ம் வசனம் கூறுகிறது

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.



சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை கீழே பகிர்ந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *