சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் …!
கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !அந்த பெண் நீதிபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”

நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் …. அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”

ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .
ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?

“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்….” “ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”
“உங்கள் அப்பா – அம்மா …?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ … உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
“இல்லை..”
shruthiinsagih

இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?” “இல்லை..”
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .

நிருபர்களைப் பார்த்து கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க … சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க … ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க … டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”

ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழம்பி .. “மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ….”

ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ…ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?…..ஓகே …போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”

திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா …பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது .

கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன் …!” நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள். ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ..?”

ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் . அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *